புதிய தேர்தல் ஆணையர்களாக.. சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார் தேர்வு.. அதிர் ரஞ்சன் செளத்ரி தகவல்

Su.tha Arivalagan
Mar 14, 2024,06:10 PM IST

டெல்லி: புதிய தேர்தல் ஆணையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக் குழு உறுப்பினரான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்  அதிர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.


தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 3 ஆணையாளர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர், மற்ற இருவரும் ஆணையாளர் ஆவர். இதில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையாளர் மட்டுமே இருக்கிறார். மற்ற இருவரின் பதவியிடங்களும் காலியாக உள்ளன. 




இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் குறித்த ஆலோசனையை மேற்கொண்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் உறுப்பினரான லோக்சபா காங்கிரஸ் தலைவரன அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், இந்த குழுவில் மத்திய அரசுக்கே பெரும்பான்மை பலம் உள்ளது, மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவர் பிரதமர் இன்னொருவர் அமைச்சர். இவர்கள் தேர்வு செய்வது தான் இறுதியாக உள்ளது.


இங்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இடமில்லை, அதுபோல சட்டத்தை மாற்றி விட்டார்கள். இந்த குழு இன்று கூடி இருவரை தேர்தல் ஆணையாளர்களாக தேர்வு செய்துள்ளது. ஒருவர் கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார், இன்னொருவர் பஞ்சாபைச் சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து என்று அவர் தெரிவித்தார்.


புதிய தேர்தல் ஆணையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஞானேஷ்குமார் மத்திய அரசின் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தவர் ஆவார். இன்னொருவரான சாந்து, உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளராக பதவி வகித்தவர் ஆவார். இந்த இருவரின் தேர்வு குறித்த முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.




அதிர் ரஞ்சன் செளத்ரி மேலும் கூறுகையில், தேர்தல் ஆணையர்கள் தேர்வு வரை ஒருதலைப்பட்சமாக நடந்துள்ளது. முன்பு 212 பெயர்கள் என்னிடம் தரப்பட்டது. ஆனால் இன்று கடைசியாக ஆறு பெயர்களை மட்டுமே தெரிவித்தனர். இந்த தேர்வு முறை முறைகேடானது என்று நான் சொல்லவில்லை. ஆனால் நம்பகத்தன்மை குறைவானது என்றார் அவர்.