தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.. வைரமுத்து

Meenakshi
Sep 20, 2023,12:20 PM IST

சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு கவிஞர் வைரமுத்து கவிதை  மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.


நடிகரும், இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரா நன்றாக படிக்கக் கூடியவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், சுட்டித்தனமும் மிக்கவர். இவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று அனைத்து தரப்பினரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். 




மீரா மறைவு குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. திரைத்துறையினரும் இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. மன அழுத்தம், மன உளைச்சல் தொடர்பான விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.


இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் மீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது கவிதை:


கொலை என்பது

மனிதன் மீது

மனிதன் காட்டும் எதிர்ப்பு


தற்கொலை என்பது

சமூகத்தின் மீது

மனிதன் காட்டும் எதிர்ப்பு


விஜய் ஆண்டனி

மகளின் தற்கொலை

சமூகத்தை எந்தப் புள்ளியில்

எதிர்க்கிறது என்பதைக்

கண்டறிந்து களைய வேண்டும்


ஒரு பூ

கிளையிலேயே

தூக்கிட்டுக் கொள்வது

எத்துணை பெரிய சோகம்


வருந்துகிறேன்


ஒரு குடும்பத்தின்

சோகத்தைப் பங்கிட்டு

என் தோளிலும்

ஏற்றிக்கொள்கிறேன். 


என்று அவர் இரங்கல் கவிதையை சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார். 


விஜய் ஆண்டனி மகள் மீரா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பொதுமக்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் இன்று மீராவின் இறுதி சடங்குகள் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நடைபெற உள்ளது.