திடீர்னு இருட்டுச்சுங்க.. அப்புறம் வந்துச்சு பாருங்க ஒரு மழை.. வச்சு செய்த வானம்.. சென்னை செம ஹேப்பி

Manjula Devi
Jun 05, 2024,04:46 PM IST

சென்னை: கடந்த இரண்டு தினங்களாக வெயில் கொளுத்திய நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கன மழை வச்சு செய்து விட்டது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


கடந்த  இரண்டு தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. அதேபோல் இன்றும் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.


இந்த நிலையில் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரெண்டு முதல் மூன்று மணியளவில்  கருமேகங்கள் சூழ்ந்து இருளானது. என்னாச்சு பகலில் இப்படி ஒரு இருளா என்று மக்கள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பிடித்தது கன மழை.. நிறுத்தி நிதானமாக வலுவாக பெய்த மழையால் எதிரில் இருப்பவர்கள் கண்ணில் தெரியாத அளவுக்கு அடர்த்தியான மழை அது. 




தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலையூர் ,செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லபாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில்  கருமேகம் கூட்டங்கள் சேர்ந்து கனமழை பெய்து கொட்டியது.  இது தவிர பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சென்னை நகரிலும் கூட பல பகுதிகளில் பார்ட் பார்ட்டாக மழை வெளுத்துக் கட்டியது. சென்னையில் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கன மழை காரணமாக சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் லேசாக பாதிக்கப்பட்டது. 


பகலிலேயே இரவு போல உள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர். ஒரே மழையில் மொத்த சென்னையும் ஜில்லென்ற கிளைமேட்டுக்கு மாறி விட்டது.