"BJP".. மத்தியப் பிரதேசமும் போச்சுன்னா அவ்வளவுதான்.. சுப்பிரமணியம் சாமி அலர்ட்!

Su.tha Arivalagan
May 14, 2023,10:42 AM IST
சென்னை: இந்தியாவின் பல மாநிலங்கள் பாஜகவை கையை விட்டுப் போய் விட்டதாக கூறியுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியம் சாமி.

பாஜகவில்தான் இருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. ஆனாலும் பாஜகவுக்கு எதிராக அவ்வப்போது சேம் சைட் கோல் போடுவதில் கில்லாடி. பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன் என ஒருவரையும் விட மாட்டார். எல்லோரையும் விமர்சிப்பார். அதேசமயம் பாஜக எதிர்ப்பாளர்களையும் ஒரு கை பார்ப்பார்.

தற்போது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து, பெரும் தோல்வியைச் சந்தித்திருப்பது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியம் சாமியும் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு வரைபடத்தை மேற்கோள் காட்டி பாஜகவுக்கு ஒரு மெசேஜ் போட்டுள்ளார் சுப்பிரமணியம் சாமி.

அதில்,  மத்தியப் பிரதேசமும் போனால் பாஜக அவ்வளவுதான் என்று கருத்திட்டுள்ளார் சுப்பிரமணியம் சாமி. அந்த வரைபடத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக அடைந்த தோல்விகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது  எத்தனை மாநிலங்களை பாஜக இழந்ந்துள்ளது என்பது அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் எத்தனை வேகமாக மாநிலங்களை பாஜக கைப்பற்றி வந்ததோ அதே வேகத்தில் இப்போது இழக்க ஆரம்பித்துள்ளது.




பாஜக மட்டும் தனித்து ஆட்சியமைத்திருக்கும் மாநிலங்கள் என்று பார்த்தால், குஜராத், மத்தியப் பிரதேசம்,  உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், அஸ்ஸாம் ஆகியவை மட்டுமே.  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளவை - மகாராஷ்டிரா, சிக்கிம், மேகாலயா, நாகாலாந்து ஆகியவை மட்டுமே.

காங்கிரஸ் கையில் கர்நாடகா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகியவை உள்ளன.  இதுதவிர தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் சிபிஎம் கூட்டணி, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி உள்ளது (இக்கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது).

ஆக இந்தியாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வேகமாக சுருங்கி வருகின்றன. இதை வைத்துத்தான் சுப்பிரமணியம் சாமியின் டிவீட் அமைந்துள்ளது. பாஜக தேசிய அளவில் தனது அணுகுமுறைகளையும், கொள்கைகளையும் மறு பரிசீலனை செய்வது அதன் எதிர்காலத்திற்கு நல்லது என்று அதன் அபிமானிகளே கருத ஆரம்பித்துள்ளனர்.