வாவ்.. முதல் நாளே சர்க்கரைப் பொங்கலா.. பள்ளிகளில் மாணவர்களுக்கு காத்திருந்த ஸ்வீட்!

Manjula Devi
Jun 10, 2024,04:29 PM IST

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பள்ளி திறக்கும் முதல் நாளே தமிழக அரசின் சார்பாக சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளிலும் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. 


தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம்  பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று சக்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. அது போலவே இனி வரும் காலங்களில் ஜூன் 3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.




ஆனால் இந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு பள்ளி திறக்கவில்லை. ஏனெனில்  வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு ஜூன் மூன்றாம் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க முடியவில்லை. மாறாக  ஜூன் 10ஆம் தேதி அதாவது இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள  அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. 


இதையடுத்து இன்றே சர்க்கரைப் பொங்கலை தருமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி,  கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் நாளாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சர்க்கரைப் பொங்கலை வழங்கினார்.