பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பானும் அதிர்ந்தது!
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஜப்பானிலும் உணரப்பட்டது. இரு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானவோ என்ற இடத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். கட்டடங்கள், வீடுகள் அதிர்ந்து ஆடின. மேலும் ஜப்பானின் தென் மேற்கு கடலோரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளின் கடலோரப் பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு அறிவுறுத்தப்பட்டனர். 3 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்று நள்ளிரவுக்கு மேல் சுனாமி அலைகள் எழும் என்றும் பல மணி நேரங்களுக்கு இது நீடிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் ஆஃப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் அதிகம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதில்தான் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் மிக மிக சாதாரணமானது. அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.