நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை வலிமைப்படுத்திட நடவடிக்கை தேவை.. எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Dec 13, 2023,06:12 PM IST

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை  சரி செய்து, உடனடியாக அதை வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே  பழனிச்சாமி கூறியுள்ளார்.


நாடாளுமன்ற  லோக்சபாவுக்குள் 2 பேர் கலர் புகையைத் தூவி நடத்திய  தாக்குதல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருவர்,  நாடாளுமன்றத்திற்கு வெளியே இருவர் என மொத்தம் நான்கு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் பயங்கரவாத அமைப்பினர் இந்திய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மக்களவையில் அனுசரிக்கப்பட்டது. அதே வேலையில் மீண்டும் ஒரு தாக்குதல் முயற்சி இன்று நடைபெற்றுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கவலை தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்ட கருத்து:


இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது  வேதனைக்குரியது.


இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன்,  இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.