கே பாலச்சந்தருக்கு சிலை.. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில்.. விரைவில்!

Su.tha Arivalagan
Dec 24, 2023,11:35 AM IST
சென்னை: மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு விரைவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சிலை வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று கே. பாலச்சந்தரின் நினைவு தினமாகும். இதையொட்டி கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பில் நினைவு தின நிகழ்ச்சியை, நலத்திட்ட உதவிகளுடன் நடத்தினர்.

தி.நகர் தக்கர் பாபா கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழிலதிபர் விஜிபி சந்தோஷம், இயக்குனர் சரண், நடிகர்கள் பூ விலங்கு மோகன், ரமேஷ் கண்ணா, தாசரதி, மாஸ்டர் பிரபாகரன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன், பாரதிராஜா மருத்துவமனை பிரேம் குமார், வழக்கறிஞர் ஜெகநாதன், நடன இயக்குனர் கிரிஜா ரகுராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்!



நிகழ்ச்சியில் பூச்சி முருகன் பேசுகையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்களின் பரிந்துரையோடு பாலசந்தருக்கு சிலை வைக்கும் கோரிக்கையை, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பாபு கொடுத்த கடிதம், தமிழக அரசின் பரிசீலனை முடிவில் இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.

இயக்குனர் சரண் பேசுகையில், பாலசந்தர் வாழ்ந்த வாரன் சாலைக்கு, பாலச்சந்தர் பெயர் வைக்க, அரசுக்கு கோரிக்கை வைத்தார். மார்னிங் ஸ்டார், சேரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் லைஃப் கிரீன் சித்த மருத்துவமனை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் லைப்கீரின் சித்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்துக் கொண்டு, இலவச மருத்துவ ஆலோசனைகள் அளித்தனர்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் 6,000 பேருக்கு இலவச மருத்துவ அடையாள அட்டையும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.