மாணவிகளை தவறாக பயன்படுத்திய வழக்கு.. பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி.. நாளை தண்டனை!

Manjula Devi
Apr 29, 2024,06:59 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர்:  கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் நிர்மலாதேவியுடன் கைதான உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்துள்ளது. தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறாக வழிநடத்தி பாலியலில் ஈடுபடுத்த, பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பல்வேறு அமைப்பினர் இவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி  ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.




கடந்த அதிமுக ஆட்சியில் இவர்களுடைய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர் 1,160 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இதற்கிடையே நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இவர்கள் மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.


இதன் பின்னர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பகவதி அம்மா அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அதேசமயம்,  முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கக் கூடாது என்று நிர்மலா தேவி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர் நீதிபதியிடம் கூறுகையில், குற்றவாளி என அறிவித்த உடனேயே தண்டனையை அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்  தரப்பு வாதத்தையும் முன்வைத்து அவருக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தண்டனை விவரத்தை நாளை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.