இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு.. முதல் வெளிநாட்டு பயணமாக.. இந்தியா வந்த அனுரா குமார

Manjula Devi
Dec 16, 2024,02:24 PM IST

டெல்லி:  இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக டெல்லிக்கு வந்துள்ள அதிபர் அநுரா குமார திசாநாயகேவுக்கு, ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.


இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 9வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுரா குமார திசநாயகே மாபெரும் வெற்றி பெற்று இலங்கையின் அதிபரானார்.




இலங்கை அதிபராக  பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் திசநாயகே. மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபருக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  அநுரா குமாராவை சந்தித்தது பேசினார் . 


இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை அதிபர் அநுரா திசநாயக்கே வுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி,  ஆகியோர் பங்கேற்றனர். 


இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் சந்தித்துப் பேசினார்.  இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கை தமிழர்கள் பிரச்சினை, கச்சத்தீவு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்