இந்தியாவிலிருந்து வருவோருக்கு விசா தேவையில்லை.. இலங்கை அதிரடி

Su.tha Arivalagan
Oct 24, 2023,10:16 AM IST
கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு விசா தேவையில்லை என்ற முக்கியமான முடிவை இலங்கை அமைச்சரவை எடுத்துள்ளது. இதுதொடர்பான பரீட்சார்த்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, தய்லாந்து, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்த விசா தேவையில்லை திட்டத்தை அமல்படுத்தவுள்ளது இலங்கை. பரீட்சார்த்த முயற்சியாக அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இதை அமல்படுத்தவும் இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகுகையில், இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார் அவர்.



கடந்த வாரம்தான் இலங்கைக்கு சுற்றுலா வர விரும்பும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஐந்து நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வர விசா தேவையில்லை என்ற திட்டத்தால் இந்தியாவிலிருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் உள்ளிட்டவை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார சீரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கைக்கு இது ஊக்கம் அளிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.