கந்த சஷ்டிக்கு திருச்செந்தூர் போகப் போறீங்களா.. நவம்பர் 2ம் தேதி முருகனை தரிசிக்க ரூ.1000 கட்டணமாம்!

Meenakshi
Sep 25, 2024,05:28 PM IST

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய, விரைவு தரிசன கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டு இந்த விழா நவம்பர் 2ம் தேதி தொடங்கி, விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகன் வதை செய்யும் நிகழ்ச்சி நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா நடைபெறும் 6 நாட்களும் பக்தர்கள் தங்கியிருந்து முருகனை தரிசனம் செய்து வருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.




இப்படி வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமியை தரிசனம் செய்ய, சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அத்தகைய கட்டணத்திற்கு  இந்த ஆண்டு ரூ.1000 என கோவில் நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு தரிசனத்திற்கு  ரூ.100 தான் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தாண்டு ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரூ. 5.15 கோடி காணிக்கை வசூல்


இதற்கிடையே, திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்று வந்தது. இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தங்கம் 2 கிலோ 352 கிராமும், வெள்ளி 41 கிலோ 998 கிராமும், 1589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்