வாக்காளர் பட்டியலில்.. உங்க பேரை சேர்க்கணுமா.. இல்லாட்டி திருத்தணுமா.. இன்னிக்கு ஸ்பெஷல் கேம்ப்!

Meenakshi
Nov 26, 2023,10:19 AM IST

சென்னை: தமிழகம் முழுவதும்  வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய  இன்று கடைசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.


இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்.27ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. பொதுமக்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும், நேரில் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களிடமும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.




நவம்பர் 3ம் தேதி நிலவரப்படி, நேரிலும் ஆன்லைன் மூலமும் 36142 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. குறிப்பாக, அதில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும்  15,187 பேர் வழங்கியிருந்தனர். முகவரி மாற்றத்துக்கு 19036 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பொதுமக்கள் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த நவ 4,5-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.


இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப பெற்றனர். சுமார் 6 லட்சத்து 112 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, நவ.18,19 ஆகிய இரு தினங்களும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நவ.18ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் மற்றும் பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டிருந்ததால், நவ.25, 26ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.


இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 31 ஆயிரம் வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.