வெள்ளத்தில் சர்டிபிகேட்ஸ் சேதமாயிருச்சா?.. Don't worry.. சென்னையில் நாளை 46 இடங்களில் சிறப்பு முகாம்

Meenakshi
Dec 11, 2023,05:30 PM IST

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக இழந்த அரசு சான்றிதழ்களை பெற நாளை 46 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


சென்னையில் புயல் செய்த பாதிப்புகள் ஒன்றா... ரெண்டா... அப்பப்பா ஏராளம். எதைச் சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை. பாதிப்படைந்த பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளத்திலும், மழையிலும் சேதமடைந்த அரசு சான்றிதழ்களை இலவசமாக பெற சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு நாளை அவை நடத்தப்படுகின்றன.


புயலினால்  பல வீடுகளில் மழை நீர் புகுந்ததால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்து உள்ளன. இந்த சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை46 இடங்களில் சிறப்பு  முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும். மாநகராட்சி வார்டு வாரியாக அந்தந்த பகுதி அலுவலகங்களில் முகாம்கள் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடா தெரிவித்துள்ளார்.




இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை , பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணம் இன்றி பெரும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


அதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற நாளை முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி திருவெற்றியூர், மணலி, புழல், மாதாவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை,திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், பேரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.


இதேபோல திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.