திருப்பதி பிரம்மோத்சவம்.. தமிழ்நாட்டிலிருந்து.. செப். 30 முதல் அக். 13 வரை.. சிறப்பு பேருந்துகள்!

Manjula Devi
Sep 26, 2024,03:58 PM IST

சென்னை: திருப்பதி திருமலையில் பிரம்மோத்சவம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.


புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி ஏழுமலையானுக்கு விசேஷமான மாதம். இதனால் இம்மாதத்தில் வரும் பிரம்மோத்சவ விழாவை காண பக்தர்கள் ஏராளமானோர் திருப்பதிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் புரட்டாசி மாத பிரம்மோத்சவ விழா வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில்  காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. 


இதற்கிடையே புரட்டாசி மாதத்தில் மகாலய பட்சம் என சொல்லக்கூடிய புரட்டாசி அமாவாசையும் வருகிறது. இந்த நாளில் முன்னோர்களின் ஆசி பெற அவர்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதற்காக பக்தர்கள் பெருமளவில் கோயில்களுக்குச் சென்று தங்கள் வேண்டுதல்களை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




இதனை கருத்தில் கொண்டு திருப்பதி பிரம்மோத்சவ விழாவை  முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி, மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர்  13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக முன் பதிவு சேவைகளையும் செய்துள்ளது.


அதேபோல் மகாளய அமாவாசையை முன்னிட்டு, சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும், அக்.1-ம் தேதி ராமேஸ்வரத்திற்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க பட உள்ளது. மறு மார்க்கமாக ராமேசுவரத்திலிருந்து அக்.2-ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்