3 நாட்கள்.. தொடர் விடுமுறையை முன்னிட்டு.. கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Manjula Devi
Jun 13, 2024,06:11 PM IST

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


தமிழக அரசு தற்போது பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் மக்கள் சிரமமில்லாமல் பயணிக்க சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைகள்  வர உள்ளது.


இந்த நிலையில் அரசு  போக்குவரத்து துறை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.




அதன்படி, வரும் 14 ,15, 16, ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக நாளை 545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் நாளை மறுநாள் 585  பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 140  சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


17ஆம் தேதி அதாவது பக்ரீத் பண்டிகை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 705 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.