சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கிளாம்பாக்கம், கோயம்பேட்டிலிருந்து.. ஸ்பெஷல் பஸ்கள்.. என்ஜாய் மக்களே!

Manjula Devi
Aug 14, 2024,05:30 PM IST

சென்னை: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க  திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


78வது  சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாடப்பட உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு, சனி மற்றும் ஞாயிறு என வார இறுதி நாட்கள் வருவதால் மக்கள் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வெளியூர் செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தினசரி இயக்கும் பேருந்துகளை விட கூடுதலாக  சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.



அதன்படி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி இன்று மற்றும் ஆகஸ்ட் 16,17 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 470 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதி 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. 


அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து  திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை ,ஓசூர் ,ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகளும் ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இது தவிர பெங்களூர், திருப்பூர்,ஈரோடு, கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் ஆகஸ்ட் 16 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. 


பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC மொபைல் ஆஃப் மூலமாகவும்  முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்