கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது.. முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி

Meenakshi
Sep 26, 2024,04:28 PM IST

சென்னை: லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின்  மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.


40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் திரைப்படங்களில் அதிகமாக பாடியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரின் மகன் எஸ்.பி. சரண் கடந்த 23ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வசித்த வீடு உள்ள பகுதியான, சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என பெயர் வைக்க வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தார்.




இவரது கோரிக்கையை ஏற்ற மு.க.ஸ்டாலின் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த நாளான நேற்று காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என தெரிவித்திருந்தார்.  எஸ்.பி.சரண் கோரிக்கை வைத்த 36 மணி நேரத்தில் அதற்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், நடிகரும், மநீம கட்சித் தலைவருமான கமலஹாசன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின்  மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்