நான் அக்கா இல்லை.. இவங்களுக்கெல்லாம் அம்மா.. அசத்திய செளம்யா அன்புமணி ராமதாஸ்!

Su.tha Arivalagan
Mar 31, 2024,06:16 PM IST

தர்மபுரி: தர்மபுரி பாமக வேட்பாளர் செளம்யா அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நாளுக்கு நாள் அசத்தலாக போய்க் கொண்டிருக்கிறது. மக்களிடையே அவர் எதார்த்தமாக, எளிமையாக பேசுவது அனைவரையும் கவர ஆரம்பித்துள்ளது.


சௌமியா அன்புமணி தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார். இவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார். ஏற்கனவே இவரது தந்தை எம் கிருஷ்ணசாமி பல வருடங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, எம்பியாக இருந்தவர். இவரது சகோதரர் விஷ்ணு பிரசாத் ஆரணி எம்பியாக இருந்தவர். தற்போது இவர் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.


இந்த நிலையில் சௌமியா அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அவர் மிக மிக எளிமையான முறையில் எதார்த்தமாக பேசி வாக்குகளை சேகரிப்பது பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. குறிப்பாக பெண்களிடம் அவர் இயல்பாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார். எதார்த்தமாக பேசுகிறார், எந்த பில்டப்பும் இல்லாமல் பேசுகிறார். நிதானமாக ஒரு பக்கத்து வீட்டு பெண்மணி போல இயல்பான முறையில் அவர் பேசுவது பலரையும் கவர்ந்துள்ளது.




இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள மகளிர் கல்லூரி பேருந்தில் ஏறிய சௌமியா அன்புமணி அந்த மாணவிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து கொண்டு அவர் கூறிய அறிவுரைகள் மாணவிகளைக் கவர்ந்தது.  நீங்க எனக்கு ஓட்டு போடணும், மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டுப் போடணும் அப்படிங்கறதுக்காக நான் இதெல்லாம் சொல்லல. உங்களுடைய பாதுகாப்பு குறித்து, பெண்கள் நம்மளை நாம தான் பாதுகாத்துக்கணும் அப்படிங்கிற அந்த ஒரு எண்ணத்துல சொல்றேன். உங்களுடைய செல்பிய, போட்டோவை, வீடியோஸை யாருக்கும் செல்போன்ல அனுப்பாதீங்க. ஒருவேளை தவறான முறையில் அது பயன்படுத்தி யாராவது உங்களை மிரட்டுனாலும் பயப்படாதீங்க.


தைரியமா அதை எதிர்கொள்ளுங்க. அதைப்பற்றி புகார் கூறுவதற்கு எத்தனையோ வசதிகள் இருக்கு அதை பயன்படுத்துங்க. என் பொண்ணுங்களுக்கு நான் எப்படி அட்வைஸ் பண்ணுவேனோ அது மாதிரி நினைச்சு தான் நான் உங்களுக்கு சொல்றேன். இது மாதிரி ஏதாவது வீடியோ வந்தால் உடனே உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிருங்க. பயப்படாதீங்க. கொஞ்சம் திட்டுவாங்க, பரவாயில்லை வாங்கிக்கோங்க. பத்து நாளைக்கு வெளியில கூட போகாம இருங்க. யார் வேணாலும் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும், கவலையே படாதீங்க. 


ஆனா அப்பா அம்மாட்ட மறக்காமல் சொல்லிடுங்க. அதுதான் உங்களுக்கு பாதுகாப்பானது. உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராம அவங்க பார்த்துப்பாங்க.. நல்லா படிங்க, படிச்சு வேலைக்கு போங்க. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க. கெட்டவங்களுக்கும் உங்களை ஏமாத்துறவங்களுக்கும் அடிபணிஞ்சுராதீங்க. அது மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய்விடும். அதனால தைரியமா இருங்க  என்று கூறினார் செளம்யா அன்புமணி.


அப்போது உடன் இருந்த பாமக அவைத் தலைவர் ஜி.கே.மணி, ஒரு மூத்த சகோதரியோட அட்வைஸா இதை எடுத்துகோங்க என்று கூற அப்போது குறுக்கிட்ட செளம்யா, சகோதரியெல்லாம் இல்லை.. எல்லாமே என் பொண்ணுங்கதான்.. என் பொண்ணுங்க கிட்ட பேசுவது போலத்தான் நான் பேசறேன் என்று சிரித்தபடி கூறினார்.


போற போக்கைப் பார்த்தா, செளம்யா அன்புமணி தர்மபுரியை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அப்படி போய்ட்டிருக்கு அவங்களோட பிரச்சாரம்.