ஹேப்பி நியூஸ்..  தூத்துக்குடி டூ சென்னைக்கு இன்று ஸ்பெஷல் ரயில்.. முன்பதிவில்லாமல் பயணிக்கலாம்!

Meenakshi
Apr 20, 2024,12:13 PM IST

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று மாலை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக தெற்கு ரயில்வே இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.


தமிழகத்தில் நேற்று நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று வாக்குப்பதிவு நல்ல முறையில் முடிந்த நிலையில், இன்று சென்னை திரும்பும் பயணிகளுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. காலையிலேயே கூட்டம் அலை மோதுவதால், தெற்கு ரயில்வே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. 




அதன்படி, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு ரயில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்படும் ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரயில், கோவில்பட்டிக்கு 5.30 மணிக்கு வந்து சேரும்.


2 நிமிடங்கள் கோவில்பட்டியில் நிற்கும். சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு 7.20 மணிக்கு வந்து சேரும்.  7.25க்கு மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு இரவு 10.15க்கு மணிக்கு வரும். திருச்சியில் இருந்து 10.20 மணிக்கு புறப்படும் ரயில், ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேரும். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 3.55க்கு மீண்டும் புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகாலை  4.45 மணிக்கு வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது. 


இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.