தென் மேற்கு பருவ மழை.. அந்தமானில் நாளை தொடங்கப் போகிறது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Manjula Devi
May 18, 2024,11:46 AM IST

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை அந்தமானில் நாளையே தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்து காலம் மாறி தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவி வருகிறது. ஜுன் மாதத்தில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என  ஏற்கனவே அறிவித்திருந்தது.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது அநேக  இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய கூடும். குறிப்பாக தென் மாவட்டங்களில் 12 முதல் 20 செமீ வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


நாளை தொடங்குகிறது தென் மேற்குப் பருவ மழை


இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில்  தென் மேற்கு பருவ மழை நாளை தொடங்க  வாய்ப்புள்ளதாகவும், இதனால் தான்  தற்போது தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழைக் பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்:


நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.