கேரளாவில்.. தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை.. பல ஊர்களில் கன மழை பெய்யும் என அறிவிப்பு

Su.tha Arivalagan
May 30, 2024,05:54 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு ஊர்களில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.


வழக்கமாக ஜூன் 1ம் தேதிதான் கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். இந்த முறை முன்கூட்டியே மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அதேபோல வட கிழக்கு இந்தியாவிலும் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கொச்சி, ஆலுவா, திருனவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துல்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கொச்சியில் பெய்த கன மழையால் பல ஐடி பூங்காக்களில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் 28ம் தேதி முதலே பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அளவுக்கு பலத்த மழையும் பெய்துள்ளது. காக்கநாடு இன்போபார்க், ஆலுவா - எடப்பள்ளி பகுதிகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமையிலிருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.


இதற்கிடையே, அடுத்த 7 நாட்களுக்கு  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகாவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கேரளாவைப் போலவே வட கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.