வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் தமிழ்நாடு மக்கள்... ராணுவ உதவி கோரியது தமிழக அரசு

Meenakshi
Dec 18, 2023,02:42 PM IST

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் கடற்படையின் உதவி கேட்டுள்ளது தமிழக அரசு.


திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இருக்கும் பகுதிகளில் அதிகளவில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.


மழை நீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு, விமான சேவை ரத்து, ரயில் சேவை பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். 




சிவ்தாஸ் மீனா பேட்டி


இந்நிலையில் தென்மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின்போது அவர் கூறுகையில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. தூத்துக்குடி நெல்லையில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் கடற்படையின் உதவியை கேட்டுள்ளோம். 


நேற்றிலிருந்து மீட்பு பணிகளுக்காக கூடுதலாக ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீட்பு பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதிகபட்சமாக காயல் பட்டினத்தில் 93 செ.மீ மழை பெய்துள்ளது. 1992ம் ஆண்டு பெய்ததை  விட அதிகளவில் மழை தற்போது பெய்துள்ளது..


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 17 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 7500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 84 படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக வரப்பெற்ற புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.