நடிகர் சங்கம் சார்பாக.. ஜனவரி 19ஆம் தேதி.. கேப்டன் விஜயகாந்த்துக்கு இரங்கல் கூட்டம்!

Manjula Devi
Jan 04, 2024,07:21 PM IST
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்,  இரங்கல் கூட்டத்தை வரும் 19ஆம் தேதி மாலை காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்துள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

சிறந்த திரைப்பட கலைஞர். மிகவும் அன்பானவர் .ஒரு நல்ல அரசியல்வாதி. சமூக சேவகர். மக்களிடம் அன்பாக நடக்கும் உயர்ந்த மனிதர். ஏழை எளியவர்களின் துயர் துடைப்பதில் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மறைந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள், தொண்டர்கள், திரை பிரபலங்கள்,என அலைகடலென திரண்டனர். மறுநாள் மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சாவுக்கு வராத பிரபலங்கள் எல்லாம் இப்போது அங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார்  மற்றும் கார்த்தி ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.



பின்னர் நடிகர் சங்க பொருளாளரான நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் சங்கம் சார்பாக, 19ஆம் தேதி காமராஜர் அரங்கில் கேப்டனுக்கு இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர் புகழ் என்றும் நிலைக்கும் விதமாக நாங்கள் செய்கின்ற விஷயங்கள், நடிகர் சங்கம் சார்பாக செய்யும் விஷயங்கள் ,அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் எல்லாவற்றையும் அப்போது சொல்வோம். 

கேப்டன் புகழ் எப்போதும் இருக்க வேண்டும். அவருடைய அன்பை எல்லோருக்கும் நிறைய கொடுத்து இருக்கிறார். அந்த அன்பு தமிழ்நாடு முழுவதும் எப்போதும் பரவிக் கொண்டே  இருக்கும் என நம்புகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.