விறுவிறுப்பாகும் தேர்தல் களம்..கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன்

Meenakshi
Mar 23, 2024,04:28 PM IST

சென்னை: திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ம் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொருத்தவரை ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 


திமுக சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2019 தேர்தலிலும் போட்டியிட்டு 5,64,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயவர்தன் களம் காண்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்.




இந்த 3 பேர் களம் இறங்கும் தொகுதியாக தென்சென்னை இருப்பதினால், இது நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. இவர்களின் போட்டியினால் தென் சென்னை தற்பொழுது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. மாறாக, அனைத்துத் தொகுதிகளிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.