வலிப்பு வந்து ரோட்டில் மயங்கி விழுந்த பெண்.. ஓடி வந்து சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயவர்த்தன்!

Su.tha Arivalagan
Apr 07, 2024,03:36 PM IST

சென்னை: சென்னையில் வலிப்பு வந்து ரோட்டில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். அவரை தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன் ஓடி வந்து முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார். 


தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் வெளுத்து வாங்குகிறது. கூடவே தேர்தல் பிரச்சார அனலும் சேர்ந்து களமே போர்க்களமாக காணப்படுகிறது. ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் தீவிரமாக களமாடி வருகின்றனர்.


தென் சென்னை தொகுதி சூப்பர் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய தொகுதியாக மாறியிருக்கிறது. இங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் டாக்டர் ஜெயவர்த்தன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன் ஆவார். பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் களம்  கண்டுள்ளார்.




டாக்டர் ஜெயவர்த்தன், அதி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவினருடன் இணைந்து அவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பிரச்சாரத்தின்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டுள்ள எக்ஸ் பதிவில், தென் சென்னை மக்களவையின் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன்  பிரச்சாரத்தின் போது சாலையில் நடந்து சென்ற பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 


இதைக் கண்டதும் தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக  ரத்து செய்துவிட்டு தான் மருத்துவர் என்ற ரீதியில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆட்டோவில் மருத்துவமனை அழைத்து சென்று  இறுதிவரை உடனிருந்து பார்த்துக்கொண்டார்.  அவரின் மனித நேயத்தை கண்டதும் சுற்றியிருந்த பொதுமக்கள் அவரை மனதார பாராட்டினர் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


வலிப்பு வந்த அந்தப் பெண் துடித்தபடி இருந்தார். அவரை ஆட்டோவில் ஏற்றவும், பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் டாக்டர் ஜெயவர்த்தன் உதவினார். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.