நாடாளுமன்ற அத்துமீறலில் 6 பேருக்கு தொடர்பு.. ஆறு பேரும் கைது.. பரபரப்பு பின்னணி!

Su.tha Arivalagan
Dec 13, 2023,08:46 PM IST

சென்னை:  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இன்று காலை நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் நடவடிக்கையில் மொத்தம் 6 பேருக்குத் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் சம்பவம் நடந்த உடனேயே பிடிபட்டு விட்ட நிலையில் மற்ற 2 பேரையும் தற்போது டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.


இன்று காலை  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போலா புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கின. அப்போது லோக்சபாவில், பார்வையாளர் மாடத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் திடீரென உள்ளே குதித்தனர். உள்ள குதித்த அவர்கள் தங்களது ஷூவில் பொருத்தியிருந்த கலர் புகையை வெடிக்கச் செய்தனால். இதனால் லோக்சபாவில் மஞ்சள் நிறத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.


அதன் பிறகு அவர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினர். இதனால் அவையே பரபரப்பில் ஆழ்ந்தது. எம்.பிக்கள் சிலர் அவர்களை பிடிக்க முயன்றனர். சபை மார்ஷல்களும் விரைந்து வந்தனர். பின்னர் அந்த இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அதே வேளையில் நாடாளுமன்ற வளாகத்தில் போக்குவத்து பவன் அருகே ஒரு பெண் உள்பட 2 பேர் இதே பாணியில் கலர் புகையை கிளப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வரலாறு காணாத பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம் மற்றும் அமோல் ஷிண்டே என்று தெரிய வந்தது. நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் நீலம் என்பவர் கைது செய்யப்பட்டபோது, தொலைக்காட்சி நிருபரிடம் பேசிக் கொண்டே சென்றார். அப்போது தாங்கள் மாணவர்கள் என்றும் எந்த அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் கூறினா்.  நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, ஏழைகளின் குரல்களுக்கு மதிப்பு இல்லை. என்று கூறிய அவர் சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் என்றும் கூறினார்.


இந்த நிலையில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.  கைது செய்யப்பட்ட நான்கு பேர் தவிர மேலும் 2 பேருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் தலைமறைவாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.  


தலைமறைவான மற்ற இருவரின் அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒருவரது பெயர் லலித் ஜா. இன்னொருவர் பெயர் விக்கி சர்மா.  அனைவருமே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஹரியானாவின் குருகிராமில் வைத்து ஆறு பேரும் இணைந்துள்ளனர். இவர்கள் யாருடைய உத்தரவின் பேரில் இயங்கினார்கள் என்பது குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 


கர்நாடகத்தைச் சேர்ந்த மனோரஞ்சன் பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.