திருப்பதி லட்டு விவகாரம் பற்றிய கேள்வி...ரஜினிகாந்த சொன்ன பதில்

Meenakshi
Sep 28, 2024,02:04 PM IST

சென்னை:   திருப்பதி லட்டு விவகாரம் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பதில் அவரது ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது. 


ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து வரும் படம் வேட்டையன். இதில் ரஜினிகாந்த் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 20ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இத்திரைப்படத்தின் "மனசிலாயோ" பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இணையத்திலும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. 




வேட்டையன் படத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லோகேஷ்-ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் கூலி திரைப்படத்தின் படிப்பிடிப்பிற்கு சென்று விட்டு சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினிகாந்த்.


அப்போது, ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வேட்டையன் படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. தர்பாருக்கு பிறகு படம் முழுவதும் போலீசாக நடித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. தர்பாரைக் காட்டிலும் வித்தியாசமாக அனைவரும் விரும்பும் படமாக வேட்டையன் வெளியாகும் என்றார்.


இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிகர் மட்டுமல்ல, ஆன்மிகவாதி என்ற அடிப்படையில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், "சாரி... நோ கமெண்ட்ஸ்" என்று தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பும் அரசியல் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பி போது, அரசியல் கேள்வி கேட்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல என பட்டுன்னு சொல்லி விட்டு சென்றார். தற்போது லட்டு விவகாரத்திலும் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். மொத்தத்தில் சினிமா தவிர வேறு எந்த கேள்விக்கும் பதிலளிக்க கூடாது என்பதில் தலைவர் உறுதியாக இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்