ரோட்டில் நின்று போதையில் அடிதடி.. பாடகர் மனோவின் 2 மகன்கள் தலைமறைவு.. போலீஸ் வலைவீச்சு!

Manjula Devi
Sep 11, 2024,06:22 PM IST

சென்னை: பாடகர் மனோவின் மகன்களான சாகிர் மற்றும் ரபீக் மீது மூன்று பிரிவுகளின் கீழ்  கல்லூரி மாணவர்களை தாக்கிய வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.


தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகர்களில் ஒருவராக விளங்குபவர் பாடகர் மனோ. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளிலும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் 3000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளார்.இவர் அடிப்படையில் ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாடகராக வலம் வந்தவர். இதனிடையே ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்களுக்கு தெலுங்கில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.




மனோவின் மனைவியின் பெயர் ஜமீலா. இவர்களுக்கு ரபிக் , சாகிர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ரபிக்  தமிழ் சினிமாவில் நாங்க என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். இந்த நிலையில் மனோவின் மகன்கள் இருவரும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது மது போதையில் மகன்கள் இருவரும், அங்கு கால்பந்து பயிற்சி பெற்று வரும் கல்லூரி மாணவர் ஒருவரை  பலமாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அந்த கல்லூரி மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாக்கல் செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தாக்குதலில்  ஈடுபட்டவர்கள்  பிரபல பாடகர் மனோவின் மகன்கள் என்பது தெரியவந்தது.


போலீசார்  சாகிர் மற்றும் ரபீக் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில், பாடகர் மனோ மகன்களின் நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோரை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்