ஏன் கல்யாணம் பண்ணி வைக்கலை.. தாயை அடித்தே கொன்ற மகன்!

Su.tha Arivalagan
Aug 25, 2023,02:56 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் தனக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்காத தாயை அடித்தே கொன்றுள்ளார் அவரது மகன்.

சித்திப்பேட்டை மாவட்டம் பந்தா மயில்ராம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில் 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது. மகன் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார். மகனுக்கும் திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தார் அந்தப் பெண். ஆனால் ஒரு பெண்ணும் அமையவில்லை.



இதனால் மகன் கோபமடைந்தார். தனது தாய் சீரியஸாக தனக்குப் பெண் பார்க்கவில்லை என்று கூறி அவருடன் அடிக்கடி சண்டை பிடித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வழக்கம் போல சண்டை மூண்டது. அப்போது தனது தாயை அடித்தே கொன்று விட்டார் இந்த கொடூர மகன்.

இந்த சம்பவம் தொடர்பாக மகனையும், உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.  செங்கல்லை வைத்து அடித்துக் கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அ்நத மகன். அடித்துக் கொன்றதோடு நில்லாமல் அவரது தொண்டையையும் கத்தியால் கிழித்துள்ளனர். மேலும் அவரது கால்களையும் வெட்டியுள்ளனர்.  இந்தக் கொலை மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.