மாமியாருக்கு செலவுக்கு காசு கொடுப்பது "டொமஸ்டிக் வயலன்ஸ்" ஆகாது.. மருமகள் மனு டிஸ்மிஸ்!

Su.tha Arivalagan
Feb 14, 2024,06:06 PM IST

மும்பை: கணவர் தனது தாயாருக்கு செலவுக்குப் பணம் கொடுப்பது வீட்டு வன்முறை ஆகாது என்று கூறிய மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட், இதுதொடர்பாக பெண்மணி தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.


மகாராஷ்டிர மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அந்தப் பெண் பணியாற்றி வருகிறார். இவர் மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.  வீட்டு வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.


அதில், எனது கணவரின்  தாயாருக்கு மன நலம் சரியில்லை. இதை மறைத்து விட்டுத்தான் எனது கணவர் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அத்தோடு நில்லாமல் தனது தாயாருக்கு தொடர்ந்து அவர் பணம் கொடுத்து உதவி வருகிறார். எனது மாமியார் நான் வேலைக்குப் போகக் கூடாது என்று தடை போட்டு வருகிறார். சித்திரவதை செய்கிறார். அவரும், எனது கணவரும் என்னுடன் அடிக்கடி சண்டை போடுகிறார்கள்.




எனது கணவர்  வேலை நிமித்தம், 1993ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2004ம் ஆண்டு டிசம்பர் வரை வெளிநாட்டில் தங்கியிருந்தார்.  அப்போது தனது தாயாருக்காக நிறைய செலவு செய்துள்ளார். தனது தாயாரின் கண் அறுவைச் சிகிச்சைக்கும் அவர் செலவிட்டுள்ளார். எனது மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கொடுமைப்படுத்தினர் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆசிஷ் ஆயசித், இந்த வழக்கில் அத்தனை குற்றச்சாட்டுக்களும் வெறும் வார்த்தைகளில்தான் உள்ளன. எந்த விதமான ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. மேலும் ஒரு பிள்ளை, தனது தாயாருக்கு செலவுக்குப் பணம் கொடுப்பதெல்லாம் எப்படி வீட்டு வன்முறை கணக்கில் சேரும்? என்று கூறி அப்பெண்ணின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.


முன்னதாக அந்தப் பெண்ணின் கணவர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், எனது மனைவி ஒரு போதும் என்னைக் கணவராகவே மதித்ததில்லை, ஏற்றுக் கொண்டதில்லை. எப்போதும் பொய்யான புகார்களை மட்டுமே கூறி வருகிறார். அவரது கொடுமை சித்திரவதை தாங்க முடியாமல் நான் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்.


எனது வங்கிக் கணக்கிலிருந்து என்னிடம் சொல்லாமலேயே ரூ. 21.68 லட்சம் பணத்தை எடுத்து ஒரு வீடு வாங்கியுள்ளார் எனது மனைவி என்று கூறியிருந்தார்.