விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்.. ஒரே  நிமிடத்தில் தீர்வு காண முடியும்..  கனிமொழி

Meenakshi
Feb 16, 2024,05:46 PM IST

சென்னை: விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி  கனிமொழி, இந்தப் போராட்டத்திற்கு ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டுவிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.


பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர். முதல் நாளில் நடத்தப்பட்ட பேரணிகளில் ஆங்காங்கே போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட போதும் கூட, பேரணி தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தது. விவசாயிகளின் பேரணியை தடுக்க டெல்லி எல்லைகளில், காவல்துறை குவிக்கப்பட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதற்கு, தடுப்புகளும், முள்வேலிகளும் அமைக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




விவசாயிகளை தடுத்து நிறுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் தடுத்துப் பார்த்து வருகின்றனர். டிரோன்கள் மூலமும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அதைத் தகர்க்க பட்டங்களை விட்டு விவசாயிகள் பதிலடி கொடுக்கின்றனர். பல தடைகளை மீறி விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். 


மத்திய அரசிற்கும், விவசாயிகளுக்கும்  இடையே ஆன முந்தைய இரண்டு பேச்சு வார்த்தை பலன் தராத நிலையில், நேற்று நடந்த 3ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது. நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் அழைப்பு விடுந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தால் பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்க வில்லை. இதனால் பொது  மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.


இதற்கு திமுகவை சேர்ந்த எம்பி கனிமொழி தனது டிவிட் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் காட்டும் முனைப்பை விவசாயிகளின் போராட்டத்தைத் தீர்ப்பதில் காண்பித்தால், இந்தப் போராட்டத்திற்கு ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டுவிட முடியும் என்று கூறியுள்ளார்.