கடும் நிதி நெருக்கடி, மூலதனத்தை திரட்டுவதில் சிக்கல்.. தனது சேவையை நிறுத்திக் கொண்டது கூ!

Meenakshi
Jul 04, 2024,10:22 AM IST

பெங்களூரு:   மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான கூ நிதி நெருக்கடி காரணமாக அதன் சேவையை நிறுத்தி விட்டது. நேற்றுடன் கூ வின் சேவை முடிவுக்கு வந்தது.


கடந்த 2019ம் ஆண்டு நிறுவனமாக துவக்கப்பட்டது கூ தளம். இந்தியாவின் டிவிட்டர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சமூக வலைதளம் இது. இதனை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவங்கினார்கள். இந்த சேவையை தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர். மாதம் ஒரு கோடி பயனர்கள் இருந்தனர். 9 ஆயிரம் பிரபலங்கள் இதில் இருந்தனர்.




பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இது செயல்பட்டது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த தளத்தை  பலரும் பயன்படுத்தி வந்தனர். டிவிட்டருக்கு மாற்றாக இது கூறப்பட்டாலும் கூட, பெரிய அளவில் இது வளரவில்லை. காரணம், ஒரு சார்பான அரசியல் தளமாக இது மாறிப் போனதுதான். அது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் சந்தை நிலவரம், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு, புதிய மூலதனம் திரட்டுவதில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களினால் அந்நிறுவனம் நொடித்துப் போய் விட்டது. 


இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக தற்போது இந்த நிறுவனத்தை நிரந்தமாக மூடி விட்டது கூ நிர்வாகம். இந்த அறிவிப்பை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதேசமயம், தாங்கள் மீண்டும் வருவோம் என்றும், கம்பேக் இந்த துறை சார்ந்தே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 


நேற்றுடன் முடிவுக்கு வந்த கூ, கிட்டத்தட்ட எக்ஸ் தளம் போலவே இருந்தது. பிரேசில் வரை இதன் பயன்பாடு வியாபித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.