"சில்க் ஸ்மிதா கடிச்சு வச்ச ஆப்பிள்".. சிலிர்த்துக் கொண்டாடிய சமூக வலைதளம்

Meenakshi
Sep 23, 2023,05:42 PM IST

சென்னை: சில்க் ஸ்மிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு நினைவுகளையும் நினைவு கூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் இன்று. அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன.


தமிழ் சினிமாவில் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்த காலம் அது. மறுபக்கம் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் போன்றோரும் பிசியாக இருந்த நேரம். கூடவே விஜயகாந்த் உள்ளிட்டோரும் தலையெடுத்த சமயம்.. இப்படி ஜாம்பவான்கள் கோலோச்சி வந்த அந்த சூழலில் ஒரு புயல் போல வந்து சூறாவளியாக சுழன்றடித்தவர் சில்க் ஸ்மிதா.




தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான  பார்வை, ஆளை மயக்கும் குரல், வசீகரமான முகம் என்று ஒட்டு மொத்த அழகையும் தன்னகத்தே வைத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.  தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சுமார் 17 ஆண்டுகள் இந்திய சினிமா துறையில் முத்திரைப் பதித்தவர்.  


கமல், ரஜினிகாந்த் கால்ஷீட் மட்டும் கிடைத்தால் போதாது.. கூடவே சில்க்கின் கால்ஷீட்டும் கட்டாயம் வாங்கியாக வேண்டும். ஹீரோயின் கூட இல்லாமல் அப்போது படம் எடுத்து விடலாம்.. ஆனால் சில்க் டான்ஸ் இல்லாமல் வாய்ப்பே இல்லை.. அப்படி ஒரு அதகளமான மார்க்கெட்டுடன் அத்தனை பேரையும் மலைக்க வைத்தவர் சில்க் ஸ்மிதா.


அன்றைய காலகட்ட முன்னனி நடிகர்கள் கூட இவர் நடிப்பை பார்த்து வியக்கும் அளவிற்கு திறமை மிக்கவர். அவரைப் பற்றி நிறைய செய்திகள் உண்டு. அவர் இருக்குமிடத்தில் ஈ மொய்ப்பது போல கூட்டம் அலை மோதுமாம்.. அவரைப் பார்த்து ரசிக்க!



ஒரு படப்பிடிப்பின் போது சில்க் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் ஆப்பிளை கடித்து விட்டு அருகில் வைத்துவிட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒருவர் சில்க் கடித்து வைத்திருந்த ஆப்பிளை தெரியாமல் எடுத்து சென்றிருக்கிறார். பின்னர் அந்த  ஆப்பிளை ஏலம் விட்டு இருக்கிறார்.. இப்படியும் ஒரு தகவல் உலா வந்தது அப்போது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.. இப்போது அதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சொல்லிச் சிலாகிக்கிறார்கள்.


இறந்து 27 வருடங்களாகியும் கூட சில்க் குறித்த பரவசமும், பரபரப்பும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதே அவரது புகழுக்கு ஒரு சான்று.