3வது குழந்தை பிறந்தது.. மீண்டும் பெற்றோர் ஆன நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி!

Su.tha Arivalagan
Jun 03, 2024,05:54 PM IST

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்திக்கு  3வது குழந்தை பிறந்துள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் படிப்பாக சினிமாவிற்குள் வந்து, டாப் ஹீரோவாக வளர்ந்தவர். யதார்த்தமான நடிப்பால் பக்கத்து வீட்டு பையன் உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தக் கூடிய நடிகர். ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார்.


சிவகார்த்திகேயனுக்கு திருமணமாகி ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற மகனும் உள்ளனர். தற்போது மூன்றாவதாக தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.  சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 




ஜூன் இரண்டாம் தேதி ஆர்த்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் தனது குடும்பம் பெரிதாகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தன்னையும் தனது குடும்பத்தையும் அனைவரும் ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அயலான் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசானது. இந்நிலையில் அடுத்ததாக இவர் நடித்துள்ள அமரன் படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து எஸ்கே 23 என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இதற்கு இடையில் இப்போது 3வது முறையாக தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.