என் மகனை ஆசிர்வாதம் பண்ணுங்க.. 3வது மகனுக்கு பவன் என பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

Meenakshi
Jul 15, 2024,05:40 PM IST

சென்னை: கடந்த மாதம் சிவகார்த்தி்யேனுக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பவன் என பெயர் வைத்து பெயர் சூட்டு விழாவை நடத்தியிருக்கிறார்.


தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தவர். இவருக்கொன்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ், அயலான் படங்கள் கடும் தோல்வியடைந்த நிலையில், தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தில் மேஜர் முகுந்த் கதாப்பத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடக்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் இவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் தனது மாமா மகள் ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார். சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியனருக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் தங்களுக்கு 3வதாக ஒரு மகன் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். தற்போது தன் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கும் வீடியோவையும் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த பெயர் சூட்டு விழாவிற்கு இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோவில் தனது குழந்தைக்கு காதில் பெயர் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.