கேபிள் போடும்போது விபத்து.. ஊழியர் பலி..  சிங்கப்பூர் தமிழருக்கு 18 வாரம் சிறை!

Su.tha Arivalagan
Sep 07, 2023,03:56 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கேபிள் பதிக்கும் பணியின்போது போர்க்லிப்ட் வாகனத்தின் மூலம் விபத்தை ஏற்படுத்தி சக ஊழியரின் மரணத்திற்குக் காரணமான இந்திய வம்சாவளி தமிழருக்கு 18 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஆசியாபில்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் அழகப்பன் கணேசன். இவர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர். கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம5ம் தேதி தான் வேலை பார்த்து வந்த இடத்தில் தான் இயக்கிய போர்க்லிப்ட் வாகனத்தை கவனக்குறைவாக இயக்கியதால் அதில் சிக்கி குஞ்சப்பா மகேஷ் என்ற இன்னொரு இந்தியத் தொழிலாளரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்து விட்டார் கணேசன்.



இதையடுத்து கணேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தற்போது கணேசனுக்கு 18 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பல அடுக்கு கார் பார்க்கிங் பகுதியில் இவர்கள் கேபிள் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேபிள் ஒன்று போர்க்லிப்ட் மீது விழவிருந்தது. இதைப் பார்த்த குஞ்சப்பா மகேஷும், இன்னொரு ஊழியரும் வேகமாக கேபிளை தூக்கி மறுபக்கம் போட முயன்றனர். ஆனால் அந்த கேபிள் போர்க்பில்ட் வாகனத்தின் கியர் மீது விழுந்து அது வேகமாக வந்து குஞ்சப்பா மகேஷ் மீது மோதி அதில் அவர் உயிரிழந்து விட்டார்.

கணேசனைக் காப்பாற்ற கேபிளைத் தூக்கிப் போட்டார் குஞ்சப்பா மகேஷ்.. ஆனால் விதி இடையில் குறுக்கிட்டு அவரது உயிரைப் பறித்து விட்டது.