"காஸ்" விற்று கல்லாக் கட்டும் "கியாராகிட்டி".. பாத்ரூம் தண்ணியைக் கூட விடலை.. அதையும் விற்கிறாராம்!

Su.tha Arivalagan
Mar 04, 2024,06:13 PM IST

சிங்கப்பூர்: கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார்.. "யாரைப் பார்த்தாலும் தொழிலதிபரா.. இந்த தொழிலதிபர்கள் தொல்லை  தாங்க முடியலப்பா" என்று கலாய்ப்பார்.. அந்த மாதிரி சிங்கப்பூரைச் சேர்ந்த இன்ப்ளூயன்ஸரைப் பார்த்து பலரும் கலாய்க்கின்றனர்.


"அப்படி அவர் என்ன செய்து விட்டார்.. இல்லை நான் கேட்கிறேன்.. அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்" என்று பாஸ் என்கிற பாஸ்கரன் சித்ரா லட்சுமணன் மாதிரி நீங்க டென்ஷனாவது கேட்குது.. மேட்டர் இருக்குங்க!




சிங்கப்பூரைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்தான் செங் விங் யீ.. 21 வயதுதான் ஆகிறது. இந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலம். இதற்குக் காரணம் இவர் செய்யும் நூதனமான விஷயங்கள்தான். இதற்காகவே இவர் பிரபலமாகியுள்ளாராம். எல்லாமே குண்டக்க மண்டக்கதான் இவர் செய்கிறார். விடிஞ்சு வந்தா.. இன்னிக்கு  என்ன அக்கப்போர் செய்து வைத்துள்ளார் "யீ" என்று ஓடி வந்து இவரது இன்ஸ்டாகிராமை "ஆ"வென்று பார்ப்பது பலருக்கும் வழக்கமாகி விட்டது.


செங்குக்கு கியாராகிட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு. சில காலத்துக்கு முன்பு இவர் ஒரு டிராமா போட்டார்.. அதாவது பிராங்க் செய்தார். அதாவது இவரே ஆள் செட்டப் செய்து தன் மீது முட்டை வீச வைத்து பரபரப்பாக்கி அதை வைத்து லைக்ஸ் அள்ளினார். இந்த நிலையில் இன்னொரு வேலையைச் செய்துள்ளார்... இதுக்கு மேல வரும் வரிகளை நீங்க மூக்கைப் பொத்திக் கொண்டு படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.. காரணம் இதுவரை கலகலன்னு இருந்த விஷயம்.. இனி "கமகமவென" இருக்கப் போகுது!


கியாராகிட்டி என்ன செய்கிறார் என்றால் தான் விடும் "வாயு"வை பாட்டிலில் அடைத்து அதை விற்க ஆரம்பித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  உங்கள் மனம் கவர்ந்த கியாராகிட்டியின் மணத்தை நுகர விரும்புகிறீர்களா.. அதை ஏன் கற்பனை செஞ்சுட்டு இருக்கீங்க.. வாங்கி அனுபவித்து பாருங்களேன் என்று கூறுகிறது அந்த அறிவிப்பு!


பாட்டில் அடைத்து வைக்கப்படும் இந்த "வாயு"வானது.. பாட்டில் மூடியை திறந்து பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, 30 நாட்கள் வரை "மணம்" குறையாமல் இருக்குமாம்..!   ஒரு பாட்டில் "காஸ்" விலை ஜஸ்ட் 19 ஆயிரத்து 646 ரூபாய்தானாம்.. இதுக்கு அந்த ஊரில் ஜிஎஸ்டி இருக்கான்னு தெரியலை!!




என்ன கரும காலக் கொடுமைடா சரவணான்னு மூக்கைச் சுளிக்காதீங்க பாஸ்.. "கேஸ்" வியாபாரம் பட்டையைக் கிளப்புதாம்.. பாட்டில் பாட்டிலாக ஸ்டாக் வேகமாக காலியாகி வருகிறதாம். இவர் இதை மட்டும்தான் விற்கிறாரா என்றால் இல்லை.. இதற்கு முன்பு இன்னொரு பிசினஸை அறிவித்தார்.. அதாவது ரூ. 8295 கொடுத்தால் போதும், தன்னைக் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அதுக்கும் கூட்டம் அலை மோதியது.


அத்தோடு நின்றாரா .. தான் பயன்படுத்திய உள்ளாடைகளையும் கூட அவர் சல்லிசான விலைக்கு விற்றுக் காசு பார்த்தார். அதை விட கொடுமை என்னன்னா தான் குளித்த பிறகு அந்த தண்ணீரையும் கூட விற்பனைக்கு விட்டார்.. அதையும் வாங்கிட்டுப் போக பக்கிப் பயலுக பல பேர் காத்திட்டிருந்தாங்கன்னா பார்த்துக்கங்களேன்!


பயங்கரமானா ஆளா இருக்கும் போலயே!