ஆப்கானிஸ்தான் போட்டி.. சுப்மன் கில் விளையாட மாட்டார்.. பிசிசிஐ அறிவிப்பு

Su.tha Arivalagan
Oct 09, 2023,04:39 PM IST
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா அடுத்து ஆப்கானிஸ்தானுடன் விளையாடவுள்ளது. இப்போட்டியிலும் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷான் டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர வைத்தார்.



இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.  டெல்லியில் அக்டோபர் 11ம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. 

சுப்மன் கில் தொடர்ந்து சென்னையிலேயே தங்கியிருப்பார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்.

கில் விளையாட முடியாத நிலை தொடர்வதால், இஷான் கிஷானே, ஆப்கானிஸ்தான் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்று தெரிகிறது.  அதேபோல ஷிரேயாஸ் அய்யரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவரும் கூட டக் அவுட் ஆனது நினைவிருக்கலாம்.