சென்னையில் .. பாட்டிலில் அடைத்து வைத்து.. தாய்ப்பால் விற்பனை.. அதிகாரிகள் ரெய்டு.. கடைக்கு சீல்!

Meenakshi
May 31, 2024,12:56 PM IST

சென்னை: சென்னையில் பாட்டில்களில் அடைத்து வைத்து தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இயற்கையே, மனிதனுக்குக் கொடுத்த ஊட்ட சத்துதான் தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்தே முதல் உணவு கிடைக்கிறது.. அதுதான் தாய்ப்பால். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரமாகத் திகழ்கிறது. இதில் கொழுப்பு, புரதம், கார்போஹட்ரேட்டுகள் மற்றும் மாறக்கூடிய தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. 




குழந்தையின் நோய் தொற்று மற்றும் அழற்சிக்கு எதிராக தாய்ப்பால் பாதுகாப்பு தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கிறது. குழந்தையின் வளர்ச்சியையும் அது உறுதி செய்கிறது. இப்படிப்பட்ட இயற்கை வரத்தை இப்போது விற்பனை செய்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக, ஆன்லைன்களில் அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. தாய்ப்பாலை தானமாகவோ அல்லது காசு கொடுத்தோ வாங்கி அதை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.


சென்னை மாதவரத்தில் முத்தையா என்பவரின் கடையில், சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை நடப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பாட்டில்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்ப்பால் விற்பனை தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. மேலும், தாய்ப்பாலை விற்பனை செய்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.


அதேசமயம், பல தொண்டு நிறுவனங்கள் தாய்ப்பாலை தானமாக பெறுகின்றன. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இவை கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு இவை தானமாக வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.