சானியாவுடன் குடித்தனம்.. சனா ஜாவேத்துடன் 3 வருஷமாக காதல்.. அதிர வைக்கும் சோயப்பின் மறுபக்கம்!

Su.tha Arivalagan
Jan 27, 2024,06:49 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும், தற்போது அவர் மணந்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கும் இடையே 3 வருடமாகவே காதல் இருந்து வந்ததாக பாகிஸ்தானிலிருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.


சோயப் மாலிக்கின் புதிய திருமணம், அவருக்கும் சானியா மிர்ஸாவுக்கும் இடையிலான விவாகரத்து ஆகியவை இன்னும் பாகிஸ்தானில் பேசு பொருளாக உள்ளது. சானியா மிர்ஸாவுக்கு அங்கு ஆதரவு தெரிவிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது.


ஆரம்பத்தில் இருவரும் பிரியக் கூடாது என்று நினைத்தோர் கூட தற்போது சானியா எடுத்த முடிவு சரிதான், அவர் சோயப்பை விவாகரத்து செய்ய முடிவு செய்தது சரியான செயல்தான் என்று சானியாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனராம்.




இந்த நிலையில் சாமா என்ற டிவி சானலில், சோயப்பின் புதிய திருமணம் தொடர்பான பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 3 வருடமாகவே சோயப்புக்கும், சனாவுக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாகவும், இதனால்தான் சானியா மிர்ஸா அப்செட்டாகி விவாகரத்து முடிவைு எடுத்ததாகவும் அந்த டிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது சானியாவுடன் குடும்பம் நடத்திக் கொண்டே சனாவுடன் சோயப் உறவு வைத்திருந்தது போல, சனாவும், தனது முன்னாள் கணவர் உமைர் ஜஸ்வாலுடன் குடும்பம் நடத்திக் கொண்டே சோயப்புடனும் உறவில் இருந்துள்ளார். சோயப்பைத் திருமணம் செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் உமைரை சனா விவாகரத்து செய்துள்ளார்.


சாமா டிவியில் ஏதாவது விவாதத்திற்கு சோயப்பை அழைத்தால், கூடவே சனாவையும் அழைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பாராம்.  இருவருக்கும் இடையே உடல் ரீதியான தொடர்புகளும் திருமணத்திற்கு முன்பே இருந்துள்ளதாகவும் அந்த டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.


உமைருக்கு இதுகுறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டுதான் சானியா மிர்ஸா, அவரது குடும்பத்தினர் மற்றும் சோயப் மாலிக் குடும்பத்தினருக்கு இதுகுறித்துத் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர். பிரச்சினையை சரி செய்ய சோயப்பிடம் அனைவரும் பேசியுள்ளனர். ஆனால் சோயப் எதற்கும் ஒத்து வரவில்லையாம். சனாவை கைவிட அவர் தயாராக இல்லையாம். இதனால்தான் சானியா மிர்ஸா, விவாகரத்து முடிவுக்கு வந்தாராம்.