"டைட்டில் உன்னோடது.. மக்கள் மனசு என்னோடது".. நெகிழ வைத்த ஷிவின்..!

Baluchamy
Jan 24, 2023,03:08 PM IST
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 6 சீசன் வின்னராக அஜீம் உருவெடுத்தாலும் கூட மக்கள் மனதில் விக்ரமனும், ஷிவினும்தான் நீக்கமற நிறைந்துள்ளனர்.



இல்லத்தரசிகளின் நெஞ்சில் குடியிருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 6  பல சர்ச்சைகளுடன் முடிவடைந்துள்ளது. பிக் பாஸ் இல்லத்தில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட அஜீம் வெற்றியாளராகியுள்ளார். அதிக மக்களின் அபிமானத்தைப் பெற்ற விக்ரமனும், ஷிவினும் இறுதிச் சுற்றில் 2, மற்றும் 3வது இடத்தையே பிடித்தனர்.

பிக் பாஸ் தொடங்கிய நாள் முதல் மக்கள் தங்களின் வீட்டுப் பிரச்சனைகளை கண்டு வருந்தினார்களோ இல்லயோ பிக் பாஸ் வீட்டுக்குள் நிலவும் பிரச்னைகளை பற்றி நினைத்து பெரிதும் கவலைப்பட்டனர் இதன் ரசிகர்கள். சிலர் அச்சச்சோ என் தலைவன் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு போய்ட்டாரே!, அஜீம் ஏன் இப்படி கத்தி கத்தி பேசுறாரு! என மக்கள் புலம்பும் அளவிற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நிகழும் பிரச்சனையை தான் பிரச்சனையாக நினைக்கும் அளவிற்கு நிகழ்ச்சியின் தாக்கம் இருந்தது.

100 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் மக்களே நடுவர்களாக இருக்கின்றனர். வாரம் ஒரு முறை எலிமினேஷன் நடைபெறும். அதில் மக்களின் ஓட்டு அடிப்படையில் யார் இறுதி வரை பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்படாமல் இருக்கிறார்களோ அவர்களே வின்னர் என அறிவிக்கப்படுவர்.

அந்தவகையில் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷிவின். டாஸ்க் விளையாடுவது முதல் தனது கருத்துக்களை தெரிவிப்பது வரை அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டின் முதல் வார கேப்டனாக இருந்தவர் ஷிவின். பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தனது ஆளுமையை காட்டி பிக் பாஸ் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்தார். படிப்படியாக மக்களின் பிடித்தமான போட்டியாளராக உருவெடுத்த ஷிவின் ஒரு கட்டத்தில் இவர்தான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என பேசப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் மேடையில் கமல் ஹாசன் வெற்றியாளரை தெரிவிப்பதற்கு முன் மக்கள் மத்தியில் சஸ்பென்ஸை அதிகரிக்கும் வகையில் ஷிவின், அஜீம் மற்றும் விக்ரமன் குடும்பத்தினரிடமும் யார் வெற்றி பெறுவார்கள் என கேள்வி கேட்டார்.

கமலின் இந்த கேள்விக்கு அஜீம் மற்றும் விக்ரமன் குடும்பத்தினர் ஷிவின் தான் என கூறுகையில் அரங்கத்தில் உள்ள பலரும் ஷிவின் தான் ஜெயிப்பார் என ஆதரவு கொடுத்தனர். ஷிவினுக்கு ஆதரவு அதிகரிக்க ஒரு பக்கம் மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இறுதியாக பிபியை எகிறவைக்கும் சஸ்பென்ஸை உடைத்து கமல், அஜீமின் கையை உயர்த்தி இவர் தான் வெற்றியாளர் என தெரிவித்த நிலையில் ஷிவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஷிவினுக்கு என்ன குறை அவர் தான் இந்த டைட்டுளுக்கு பொருத்தமானவர் என ஷிவின் ஆதரவாளர்கள் டென்சன் ஆனாலும் டைட்டில் இல்லைனா என்ன எங்க மனச ஜெயிச்சுட்டாங்கள்ள என ஆறுதல் அடைந்தனர்.