ஷேக் ஹசீனாவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது உண்மைதான்.. உடைத்துப் பேசிய மகன்!

Aadmika
Aug 07, 2024,10:12 AM IST

டாக்கா :   வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் படி ஷேக் ஹசீனாவிற்கு போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தால் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக ஹசீனாவின் மகன் சஜீப் வாசித் தெரிவித்துள்ளார்.


வங்கதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக வங்கதேசத்தில் பயங்கர கலவரம், போராட்டம் வெடித்து கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்நிலையில் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவர் இந்தியாவில் வசிக்க போகிறார், லண்டன் செல்ல போகிறார் என பலவிதமாக தகவல்கள் பரவி வருகின்றன. 




ஹசீனாவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது மகன் சஜீப்பிடம் கேட்கப்பட்டது.  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சஜீப், என்னுடைய அம்மா இதுவரை எங்கு தங்குவது என்பது பற்றி முடிவு செய்யவில்லை. வெளியாகும் அனைத்து தகவல்களும் வதந்திகள். அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின் தரப்பில் இருந்து அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. பதவி விலகிய பிறகு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் இந்தியா சென்று விட்டார். காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் ஏர் பேசில் அவர் தரையிறங்கி, பத்திரமான இடத்திற்கு சென்று விட்டார். அங்கு தான் இப்போதும் தங்கி வருகிறார்.


எங்கு வசிப்பது என்பது குறித்து அவர் இதுவரை முடிவு செய்யவில்லை. அவர் டில்லிக்கு சென்று சிறிது காலம் தங்க உள்ளார். என்னுடைய சகோதரி அங்கு தான் உள்ளார். அதனால் அங்கு அவர் தனியாக இருக்க போவதில்லை. எங்கு செல்வது என்பது குறித்து அவர் எந்த முடிவையும் எடுக்கவும் இல்லை. சொல்லவும் இல்லை என்றார்.


ஷேக் ஹசீனாவின் மகள் சாய்மா வசித், உலக சுகாதார மையத்தின் தென் கிழக்கு ஆசியாவிற்கான மண்டல இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் மனோதத்துவ பயிற்சி அளிப்பவர். முதலில் ஹசீனா லண்டனுக்கு செல்வதாக தான் முடிவு செய்திருந்தாராம். கடைசி நிமிடத்தில் தான் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு இந்தியா வந்துள்ளாராம். இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஹசீனாவை வரவேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.


ஹசீனா லண்டன் செல்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் அவர் லண்டன் செல்லும் திட்டத்தை மாற்றி டில்லி வந்துள்ளாராம். டில்லியில் இருந்து ஐரோப்பா, ஐக்கிய அரசு அமீரகம், பின்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றில் எந்த நாட்டிற்கு செல்லலாம் என தற்போது ஹசீனா ஆலோசித்து வருகிறாராம். ஐரோப்பிய உள்துறை அமைச்சக தகவல்களின் படி, அரசியல் அடைக்கலமாக வரும் தனிநபர்களுக்கு அனுமதி அளிக்க அந்த நாட்டு புலம்பெயர் விதிகள் அனுமதிக்காதாம். அதே போல் தற்காலிக அடைக்கலம் அல்லது அகதியாக இருக்கவும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்களாம். நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் அவர்களின் சட்டம் இதற்கு இடம் அளிக்காததால் தான் ஹசீனாவால் லண்டன் செல்ல முடியவில்லையாம்.