தொடர் கலவரம்.. வங்கதேசத்தை விட்டு வெளியேறினார் பிரதமர் ஷேக் ஹசீனா.. ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்!

Su.tha Arivalagan
Aug 05, 2024,06:53 PM IST

டாக்கா:  வங்கதேசத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையும், கலவரமும், போராட்டமும் வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறி விட்டார்.  ராணுவம் அங்கு இடைக்கால ஆட்சியமைப்பதாக ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். இதனால் வங்கதேசத்தில் ராணுவப் புரட்சி நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.


வங்கதேசதத்தில் நீண்ட காலமாக பதவியில் இருந்து வருகிறார் ஷேக் ஹசீனா. தேர்தல்களில் அவர் முறைகேடு செய்துதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக புகார்கள் உள்ளன. மேலும் அவரது ஆட்சிக்கும்,  கொள்கைளுக்கு எதிராகவும் நீண்ட காலமாக மக்கள் மத்தியில் அதிருப்தி வெடித்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொண்டு வந்த இட ஒதுக்கீடு உத்தரவு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது.




சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ஹசீனா அரசு கொண்டு வந்தது. ஆனால் இது தனக்கு ஆதரவாக இருப்போருக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட சட்டம் என்று மக்கள் கொந்தளித்தனர். நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர். இது மிகப் பெரிய கொந்தளிப்பாக மாறியது. நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பொதுச் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இட ஒதுக்கீடு சட்டத்தை வங்கதேச உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் கலவரம் ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கலவரம் சற்று தணிந்தது. ஆனால் தற்போது மீண்டும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.


இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா


இந்த முறை அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. தலைநகர் டாக்கா தவிர நாடு முழுவதும் கலவரம் பரவவே தற்போது ஷேக் ஹசீனா தனது பதவியை  ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு ஓடி விட்டார். டாக்காவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் வெளியேறினார்.  அங்கிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அவர் திரிபுராவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை ராணுவத் தலைமைத் தளபதி வக்கார் உஸ் ஜமான் உறுதிப்படுத்தியுள்ளார்.  ராணுவம் இடைக்கால ஆட்சியமைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து கலவரமும் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் ஹசீனா வெளியேறியதை மக்கள் சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள்.