என்னது...ஷேக் ஹசீனா பதவி விலக வில்லையா?...உண்மையை உடைத்த மகன்

Aadmika
Aug 10, 2024,10:57 AM IST

டாக்கா :  வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அதிகாரப்பூர்வமாக பதவி விலகவில்லை என்றும், தற்போது வரை அவர் தான் வங்கதேசத்தின் பிரதமர் என்றும் ஷேக் ஹசீனாவின் ஆலோசகரும், மகனுமான சஜீப் வசீத் தெரிவித்துள்ளார். இது வங்கதேசத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


வங்கதேசத்தில் ஏற்பட்ட பயங்கர கலவரம் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஹேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து வந்து, நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் தற்போது இந்தியாவில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப், எனது அம்மா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவருக்கு போராட்டகாரர்கள் மற்றும் ராணுவத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் தற்போது இந்தியாவில் தான் இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் எங்கு வசிக்க போகிறார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறி இருந்தார்.





இந்நிலையில் வாஷிங்டனில் இருந்து வந்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சஜீப், என்னுடைய அம்மா அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யவில்லை. அவருக்கு ராஜினாமா கடிதம் கொடுக்கவும், அதனை ஏற்றுக் கொள்வதற்கும் போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. ராஜினாமா குறித்த அறிக்கையை வெளியிடவும், ராஜினாமா கடிதத்தை அளிக்கவும் அவர் திட்டமிட்டமிட்டிருந்தார். அதற்குள் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி வர துவங்கினர். அதனால் என்னுடைய அம்மாவிற்கு அவருக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள கூட போதிய நேரம் இல்லை. வங்கதேச அரசியலமைப்பு சட்டத்தின் படி பார்த்தால், என்னுடைய அம்மா தான் தற்போது வரை வங்கதேசத்தின் பிரதமர் என்றார்.


வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு ஒதுக்கீடு மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். பிரதமர் மாளிகையையும் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துக் கொள்ள முயற்சித்ததால் வேறு வழியின்றி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


சஜீப் மேலும் கூறுகையில், பிரதமர் முறையாக ராஜினாமா செய்யாத நிலையில் அவரது ஆலோசனை இல்லாமலே அதிபர் பார்லிமென்ட்டை கலைத்துள்ளார். அதிபரின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர உள்ளோம். அது வரும் இடைக்கால அரசிற்கான தேர்தலிலும் அவாமி லீக் கட்சி போட்டியிடும். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை அது முடியாமல் போனால் எதிர்க்கட்சியில் நிச்சயம் அமர்வோம் என்றார்.