பாகிஸ்தான்.. மீண்டும் பிரதமராகிறார் ஷபாஸ் ஷெரீப்.. அண்ணன் நவாஸ் விலகியதால் தம்பிக்கு வாய்ப்பு!

Su.tha Arivalagan
Mar 03, 2024,04:14 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளார். அவர் பிரதமர் பதவிக்கு வருவது இது 2வது முறையாகும்.


அவரது அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமர் பதவிக்கு  வர விருப்பம் தெரிவிக்காததைத் தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் 2வது முறையாக இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


72 வயதான ஷபாஸ் ஷெரீப், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது பிரதமர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இடைக்கால அரசு பதவியேற்றது. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.


நவாஸ் ஷெரீப் கட்சி, ஆசிப் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்டவை இணைந்து ஆட்சியமைத்துள்ளன.  மொத்தம் உள்ள 264 தொகுதிகளில் வெறும் 80- இடங்களில் மட்டுமே நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளுடன் இணைந்துதான் நவாஸ் கட்சி தற்போது கூட்டணி அரசை அமைத்துள்ளது.




பொருளாதார ரீதியில் பாகிஸ்தான் படு மோசமான நிலையில் உள்ளது. தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்துள்ளது. பணவீக்கம் மிக மோசமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி வெறும் 2 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் பிரதமர் பதவியில் அமர்கிறார் ஷபாஸ் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷபாஸ் ஷெரீப் காஷ்மீரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். லாகூரில் பிறந்தவர். பிசினஸில் இருந்து வந்தவர் இவர். நவாஸ் ஷெரீப் சிறிது காலம் லண்டனில் தங்கியிருந்த கால கட்டத்தில்தான் இவர் தேசிய அளவில் தலைவராக உருவெடுத்தார். அண்ணனுக்குப் பதில் கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக் கொண்டார்.  பஞ்சாப் முதல்வராக இருந்த இவர் பின்னர் பிரதமர் பதவிக்கு உயர்ந்தார்.


கடினமான உழைப்பாளி என்று பெயர் வாங்கியவர். இவர் பிரதமராக இருந்த காலத்தில் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்று நிலைமையை சமாளித்தவர்.


ஷபாஸ் ஷெரீப்புக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மூலம்  2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 2வது மனைவி மூலம் குழந்தை ஏதும் இல்லை. ஒரு மகன் அரசியலில் இருக்கிறார். மற்றவர்கள் பொது வாழ்க்கைக்கு வரவில்லை.


2வது மனைவியான தெமினா துர்ரானி, பிரபலமான எழுத்தாளர் ஆவார். தனது முன்னாள் கணவர் மூலம் தான் சந்தித்த கொடுமைகள் குறித்து "My Feudal Lord" என்ற பெயரில் சுயசரிதையை எழுதியுள்ளார் இவர்.


முதல்வரான நவாஸ் ஷெரீப் மகள்




முன்னதாக பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் அந்த மாகாண முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்தப் பதவியை முன்பு வகித்தவர் ஷபாஸ் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.


நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் தற்போது முக்கியப் பதவிகளில் அமர்ந்துள்ளதால் அவரது குடும்பம் மீண்டும் அரசியலில் கை ஓங்கத்  தொடங்கியுள்ளது.