ஜவான் ரிலீஸ்...ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்

Aadmika
Sep 05, 2023,01:09 PM IST
டில்லி : ஜவான் பட ரிலீசை முன்னிட்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

டைரக்டர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் செப்டம்பர் 07 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இந்த படம் மாறி உள்ளதால், நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜவான் பட ரிலீசை முன்னிட்டு நடிகர் ஷாருக்கான், தனது மகள் சுகானாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். 



வெள்ளை நிறத்தில் இருவரும் தென்னிந்திய பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். அவர்களை மீடியாக்கள் சுற்றி வளைத்து, போட்டோ, வீடியோ எடுத்தனர். ஷாருக்கான் தான் வந்திருக்கிறார் என பார்த்தால் கூடவே ஜவான் படத்தில் நடித்த நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஷாருக்கான் ரகசியமாக காஷ்மீரில் உள்ள வைஷ்ணவா தேவி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தார். நீல நிற ஜாக்கெட் அணிந்து, முகத்தை முழுவதுமாக மறைத்த படி வந்த ஷாருக்கானின் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது. சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் ஷாருக்கானுடன் பாதுகாப்பு வந்த வீடியோக்களும் வெளியாகின.

இந்நிலையில் தற்போது ஷாருக்கான் திருப்பதி கோவிலுக்கும் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதுவும் நயன்தாரா குடும்பத்துடன் வந்தது தான் தற்போது பரபரப்பிற்கு காரணம். திருப்பதி கோவிலுக்கு விஐபி.,க்கள், சினிமா பிரபலங்கள் வருவது ஒன்றும் புதிது கிடையாது என்றாலும் ஷாருக்கான் அடுத்தடுத்து புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருவது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.