செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.. சுப்ரீம் கோர்ட்.. நவம்பர் 6ஆம் தேதி விசாரணை!

Su.tha Arivalagan
Oct 30, 2023,06:01 PM IST

சென்னை : அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து,உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு  நவம்பர் 6ஆம் தேதிக்கு விசாரிக்கப்படவுள்ளது.


அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.




கைது செய்யும் போதே செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு அவருடைய உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. 


ஏற்கனவே  அவருக்கு 3 முறை ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  8 முறை சிறைக்காவலும் நீட்டிக்கப்பட்டது. உடல் நலக்குறைவை காரணம் காட்டி அக்டோபர் 19 தேதி செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை ஏற்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருக்கும் காரணத்தினால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. அதில் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஜாமீன் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு அடுத்த திங்கட்கிழமை அதாவது நவம்பர் 6ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.