அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் .. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் புறக்கணிப்பு
சென்னை : இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். இது அதிமுக மற்றும் தமிழக அரசியலிலும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து இன்று துவங்கி உள்ளது. இதில் 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் திமுக சார்பில் எம்எல்ஏ.,க்கள் கூட்டம். அதே போல் பட்ஜெட் கூட்டத் தொடரில் தங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தமிழக சட்டசபை வளாகம் வரை வந்த செங்கோட்டையன். அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்த கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். ஏற்கனவே அதிமுக தலைமையுடன் அவருக்கு பலவிதங்களில் கருத்து வேறுபாடுகள், சலசலப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது இவர் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை அப்பட்டமாக்கி காட்டி உள்ளது.
தொடர்ந்து அதிமுக தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் நடந்து வருவதால் அவர் அதிமுக.,வில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. ஒருவேளை அவர் அதிமுக.,வில் இருந்து விலகினால், அடுத்ததாக அவர் ஓபிஎஸ் அணி அல்லது பாஜக.,வில் சேருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.