மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது மாநில அரசு: பாஜக மூத்த தலைவர் தமிழிசை

Meenakshi
Feb 25, 2025,06:30 PM IST

சென்னை: மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது மாநில அரசு. தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைத்துவிட்டு பொது இடத்தில் இந்தி எழுத்தை அழிக்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக ஒரு சுமூகமாக செயல்பட்டால் என்ன? அதை விடுத்து எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் தடுக்காதீர்கள். அதை அனுமதியுங்கள். எல்லாவற்றிலும் ஈகோ பார்க்காமல் மக்களுக்காக செயல்படுங்கள். பிரதமர் மருந்தகத்திற்கு பதிலாக ஸ்டாலின் மருந்தகம் வந்துள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. அதை முதலில் பாருங்கள். எண்ணெய்யை குறையுங்கள் ஆயுள் அதிகரிக்கும் என்பது மருத்துவர்கள் கூறுவது. அதை போல மக்களுக்கு தேவையானதை செய்யுங்கள்.


தமிழுக்கு முதலில் துரோகம் செய்தது யார். என் பெயரில் மட்டுமில்லை, என் உயிரிலும் தமிழ் உள்ளது. நான் தமிழ் மீடியத்தில் 5 வகுப்பு வரை படித்துள்ளேன். கலைஞர் வீட்டில் எத்தனை பேர் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்கள். யாருடைய பெயரையும் நான் குறிப்பிட வில்லை. தமிழுக்கு முதலில் இருந்து துரோகம் செய்வது யார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு முன்னாள் ஆளுநராகவும், மாநிலத் தலைவராகவும் ஒரு கேள்வியை கேட்கின்றேன். உங்கள் அமைச்சர் அவையில் இருக்கும் அமைச்சர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எத்தனை பேர் இரு மொழி கொள்கை வழி அரசாங்க பள்ளியில் மட்டும் கற்கின்றனர்.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யா மொழி அவர்கள் சொல்வது எல்லாம் பொய் மொழியாகவே இருக்கிறது. உங்களுடைய சொந்த பையனை அரசு பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை. இன்று தமிழில் பெயர் வையுங்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் உட்பட யார் பெயரும் தமிழில் இல்லை. யார் துரோகம் செய்தது. இரு மொழி கொள்கையினால் தமிழ் வளர்ந்தது என்று சொல்கிறார். ஆங்கிலத்தை வளர்த்தீர்களா? அல்லது தமிழை வளர்த்தீர்களா? இன்றைக்கு கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என்று கூறுகின்றனர். அப்படியென்றால், என்ன தமிழ் சொல்லிக் கொடுத்தீர்கள் என்று கூறியுள்ளார்.



பள்ளியில் மட்டும் மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது மாநில அரசு. தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைத்துவிட்டு பொது இடத்தில் இந்தி எழுத்தை அழிக்கின்றனர். இந்தி  இல்லாவிட்டால் வெளி மாநிலத்தவர் எப்படி ஊர் பெயர்களை புரிந்து கொள்வர். ஆங்கிலத்தை வளர்ப்பார்களே தவிர இன்னொரு இந்தி மொழியை வளர்க்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.